Tuesday 25 June 2013

பூ வாசம் புறப்படும் பெண்ணே...

மாநிறம்தானென்றாலும் வசீகரித்தாள், பழைய சேலைதானென்றாலும் பாந்தமாய் உடுத்தியிருந்தாள்,நேர் வகிடும், நெற்றிப்பொட்டுமாய் ஈர்த்தாள் , வயதும் இருப்பதைந்திற்கு மிகையாயிறாது, காலுக்கு செருப்பு கூட இல்லாமல் , மாலை மங்கும் வேளயிலே, தேசிய நெடுஞ்சாலையில் நின்றிந்தாள் , காற்றெங்கும் அவள் வைத்திருந்த மல்லிகை மணம்....
தனியாக காரில் பயனித்துக் கொண்டிருந்த நான்,தூரத்திலிருந்தே அவளை கவனித்துவிட்டேன், வண்டியின் வேகத்தை குறைத்து, அவளருகே சென்று நிறுத்தினேன்...
லேசாய் செருமி, கரகரத்த குரலை சரி செய்துகொண்டு அவளை பார்த்து கேட்டேன் .... ரேட் என்ன ?

முழம் 10 ரூபாயென்றாள்... வாங்கி டெஸ்போர்டில் அமர்ந்திருந்த பிள்ளையாருக்கு சூட்டிவிட்டு வண்டியை கிளப்பினேன்..

- ஜீவன் -

Wednesday 27 February 2013

இன்னலே...

என் பயணம் ,
                            வேகமான வாகங்களின் நெடுஞ்சாலை..
பலர் என்னை கடந்து செல்கின்றனர். அது போல் நீயும் கடந்திருப்பாயெனின், கலங்கித் தவித்திருக்கமாட்டேன் நான்.

                          நானா உன்னை என் இமை திறந்து ஆட்கொண்டேன் ?. எப்படி நுழைந்தாய் என்னுள் என் அனுமதியின்றி ?.

                          சூறாவளிகளை வெறும் கைக்குட்டையால் சமாளிக்கும் என்னை, வெறும் தென்றலில் நீ கலங்கடித்தாய் !

                           என்ன மாதிரியான வேதனை அது ... நீ தருவது ?, தவிக்கவும் முடியாமல்... தவிர்க்கவும் முடியாமல் !

                          உன்னோடு என்னால் இருக்க முடியாது. உன் பிரிவு எனக்குச் சம்மதம் மட்டுமல்ல, சந்தோசமும் கூட.

                          இனி எப்போதும் என் கண்ணில் பட்டுவிடாதே..............

                                                                                                                                     தூசியே ! 

- ஜீவன் -



Sunday 4 November 2012

பயணம்...

தவிர்க்க முடியாதவைகள் ஆகிவிடுகின்றன சில பயணங்கள்...
அன்றிரவும் அதேமாதிரியான அவசர பயணம் .....

டிக்கெட் தேடடுதலுக்கு  IRCTC , நுழையவே முடியவில்லை.
டிக்கெட் ஏஜன்ட் எவரும் சிக்கவில்லை, ஆம்னி பஸ்ஸிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டிருந்தது....


அன்ரிசர்வ்டு பயணம், அசெளகரியம் ஆதலால் , சாமர்த்தியமாய்... வெயிட்டிங்லிஸ்ட் 615 ஆக இருந்தாலும் ரிசர்வேஷன் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரயிலேறி,  TTR யிடம் ரயில்வேயில் பணிபுரியும் உறவினர் ஒருவர் பெயர் சொல்லி, எப்படியாவது ஒரு சீட் கொடுக்கும்படி மன்றாடத் தொடங்கினேன்.

அப்போது அறிமுகமானாள்.......
 அதே TTR யிடம் தனக்கும் சீட் கேட்டு நின்ற அவள்.....
 முதலில் சீட் எனக்கா? அவளுக்கா? என்கிற போட்டியையும் தாண்டி வசீகரித்தாள்.


நேர்வகிடும்...
திருத்திய புருவமும்...
நீள நாசியும்...
கோவை இதழும்...
இரட்டை நாடியும்...
சங்கு கழுத்தும்...

க்கும்.....க்...க்கும்....ம்..ம்ம்ம்
(சரி...ச ரி..அதேதான் )

என்ன இருந்து என்ன , இப்போதைக்கு உட்கார்ந்துகொள்ளவாயும் சீட் வேணுமே...... மன்றாடல் நிறுத்தவில்லை நானும்.

மனமிறங்கிய TTR  " ஒரு பெர்த் தான் இருக்கு, ரெண்டு பேரும் அட்ஜஸ் உட்கார்ந்துக்கோங்க" என்றார்.

இரண்டு லட்டு கிடைத்த சந்தோஷம், குதூகலத்தில் மனதிற்குள்ளேயே குதித்துக் கொண்டேன்.....

அவளுக்கு அந்தமாதிரி சந்தோஷமிருந்ததாய் தெரியவில்லை.
நானோ அவளோ அருகிருந்தும் சம்பிரதாயத்திற்குக் கூட புன்னகைத்துக் கொள்ளவில்லை,
விரக்தியில் வழக்கம் போல ஆன்ட்ராய்டுக்குள் முகம் புதைத்தேன் ...

ஒரிரு மணி கடந்திருக்கும்....
என்னை அவள் கவனிப்பது போன்ற உள்ளுணர்வு எனக்கு....

சட்டென நிமிர்ந்தேன்.....
 ஆம் அவள் பார்வை என்னில் நிலைத்திருந்தது !

"அப்படி ஒரு ஏக்கப் பார்வை"

இருக்கையிலிருந்து சட்டென எழுந்தேன்..........

சற்றும் தாமதிக்காமல் காலை நீட்டிப் படுத்துத் தூங்கிப்போனாள் !

- ஜீவன் -

Wednesday 17 October 2012

காகிதவாசம் ...

மழை நாளில் கப்பல் செய்ய காகிதம் கிழித்தவன் . . .

மளிகை கடை அண்ணாச்சி பொட்டணத்தில் வாசிக்கத் தொடங்கி. . .

காமிக்ஸ், பூந்தளிர்களின் ரசிகனாகி . . .

பாடப் புத்தகங்களால் துவம்சம் செய்யப்பட்டு . . .

டீக்கடை தினத்தந்தியை பள்ளியில் பிதற்றி . . .

மொழி பழக வழி தேடி, டிக்ஸ்னரியோடு ஹிந்துவில் மூழ்கி . . .

வார இதழ்களின் சினிமா செய்திகளில் லயித்து . . .

பாட்டுப் புத்தகமும், பலான புத்தகமுமாய் சிதைந்து . . .

கவிதை புத்தகத்தில் கால் தவறி விழுந்து . . .

நிதானித்து எழுவதற்காய் கம்யூனிசம் கற்று . . .

புரட்சி கசக்க கம்யூனிசம் துறந்து. . .

தலைக்கேறிய போதை இலக்கியம் கேட்க . . .

புரியாவிடினும் புதினம் குழப்பி . . .

முழுதாய் வாசிக்கும் பொறுமை  தொலைத்து. . .

கடைசிப்பக்கம் முதலில் பருகி . . .

நுனிப்புல்லாய் புத்தகம் மேய்கிறேன் . . .  இப்போதெல்லாம்  !

அறிவு முதிர்ச்சியோ ? அறிவீனமோ ?    இதுவே நான்...!

வேண்டுவதிதுவே. . .

புத்தகங்களாலேயே கட்டுங்கள் என் கல்லறையை !
எனை அரிக்கப்போகும் கரையான்களுக்கும்  பிடிக்கும் காகிதவாசம் !

- ஜீவன் -

Saturday 26 May 2012

யாதுமானவன்....

ஆடைகள் அரைகுறையாய் !

அவன் வார்த்தைகளுக்கோ அதுவுமில்லை !

பெரும் மூட்டைக்குள் கற்கள் பொறுக்கி வைத்திருக்கிறான், அருகில் செல்வோருக்கு ஆளுக்கொன்றாய் நீட்டுகிறான் !

அழுக்கேரி சடை பிடித்த தலைமுடியே கிரீடம் !

எதோ சாதித்த பெருமிதம் எப்போதும் அவன் முகத்தில் !




நிசப்தம் சாத்தியமில்லை என்றான் !

இரைச்சல் மிகுதியென்றான் !

கூடுகளாய் குப்பை சேர்ப்பதாய் பறவைகளைப் பழித்தான் !

அம்புலி வருமுன் ஓடி மறைந்துகொள் என்று சூரியன் காதில் கிசுகிசுத்தான் !

உரக்க கத்தி.....

புதைகுழிக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே.........

வாழ்க்கை உங்களை விழுங்கிக் கொண்டிருப்பதை அறிவீரோ ? என்றான் !

எத்தனை முறை வென்றாலும் கடைசியில் தோற்றுப்போவாய் மரணத்திடம் என்றான் !

சன்னமான குரலில் .............

நிர்வானம் உடலுக்கில்லை என்றான் !

எவரும் திருப்தி அடையா தாரம் பொருளா"தாரம்" என்றான் !

அழுக்கு தாடிக்குள் விரல் சொருகி , வரட்..... வரட்டென சொரிந்தவன் .........

அலறியபடி மீண்டும் சொன்னான்..........

நிசப்தம் சாத்தியமில்லை , இரைச்சல் அதிகம்..........


- ஜீவன் -

Thursday 15 December 2011

எ.கொ.சா.இ

சின்ன வயசுல , பிறந்தநாள் பரிசா அப்பா வாங்கிக் கொடுத்த வீடியோ கேம் ரொம்பப் பிடிச்சுப் போயி ,
ஆறு நாள் தொடர்ந்து விளையாடிட்டு அதுக்கப்புறம் அத தொடவே இல்ல !

கொஞ்சம் பெரியவனா ஆனதுமே............. ,
எல்லாருந்தான் சைக்கிள் ஓட்டுராய்ங்கன்னு ,
ஆசையா சைக்கிள் பழகி ஆறு மாசம் சைக்கிளே கதின்னு கெடந்ததுல, சைக்கிள் டயர் போலயே என் சைக்கிள் ஆசையும் தேய்ஞ்சு போச்சு!

படிக்கிற வயசுல, சரியாப் படிப்பு வரலைனாலும், ஒரே வகுப்புல , ஒரு வருஷம் முழுசா படிக்க முடியாம, டீச்சர் சரியா சொல்லித்தரலைன்னு அப்பாட்டச் சொல்லி வகுப்பு பிரிவையும் அடிக்கடி மாத்தீருவேன் !

பத்தாவது வரைக்கும் படிச்சதுக்கே பள்ளிக்கூடம் சலிச்சுப் போயி, கேட்டரிங் காலேஜ்ல போய் சேர்ந்துட்டேன் !
ரெண்டே செமஸ்டர்தான்.......  கேட்டரிங்குக்கு டாட்டா சொல்லீட்டேன் !

கம்ப்யூட்டர் , கர்னாடக சங்கீதம், ஸ்போக்கன் இங்கிலீஸ்னு  எல்லா கிளாஸுக்கும் போனேன்........................ ,
பாதியிலேயே போர் அடிச்சு விட்டுட்டேன் !

நிறையா பொண்ணுங்கள சைட் அடிச்சு..................,
ஒவ்வொரு பொண்ணா, நாலு பொண்ணுங்கள லவ்வும் பண்ணிப் பாத்தேன்..................,
ம்ம்ம்ஹூம் சரியா செட் ஆகல !

சரி வேலைக்குப் போலாம்னு முடிவு பண்ணி  ................,
மெடிக்கல் ஷாப். சூப்பர் மார்க்கெட், பனியன் கம்பெனின்னு எல்லாத்துக்கும் போனேன் .......................  ,
எதுவுமே என் திறமைக்கு தகுந்ததா தெரியல !

இனி சொந்த வியாபாரம்தான் சரின்னு முடிவு பண்ணி..................,
அப்பாகிட்ட ஒரு லட்சம ரூபாய  அடம் பிடிச்சு வாங்கீட்டுப் போயி ஒரு பேன்ஸி ஸ்டோர் ஆரம்பிச்சேன்............,
வருமானம் திருப்தியா இல்ல !

இப்ப வேற ஏதாவது பெரிய பிஸினஸ் ஆரம்பிச்சுப் பாக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போது............




எனக்கு கல்யாண வயச்சாச்சுன்னு அம்மா சொல்ராங்க ........!


- ஜீவன் -

Wednesday 7 December 2011

அன்றாவது..........



பனி இரவு.........

முன் நெற்றியில் சரியும் கற்றை முடி !

பிறை நெற்றியில்,  முழு நிலாப் பொட்டு !

தேனில் விழுந்த திராட்சை போல, பாதி மூழ்கிய காமக் கண்கள் !

பக்கம் வந்தால் குத்திக் கீறிடும், கத்தியாய் நாசி !

கன்னத்தில் காலூன்றி, காது மடல் கவ்வி, ரகசியம் பேசும் காதணி !

சிலம்பாய் இதழ்கள்  !

பரல்களாய் பற்கள்!
உன் கழுத்து உரசியே தங்கமாய் மாறிக்கிடக்கும் சங்கிலி !

முழு முதுகு மறைத்து, பிட்டம் தாண்டிக் குதிக்கும் கருப்பு அருவியாய் கூந்தல் !

சேலையில் அடங்கா அழகு ................. !

வெள்ளைக் கரும்பு கைகள் !

கருப்புச் சேலையின் முந்தானை செருகியே, சிவந்து கிடக்கும் மஞ்சள் இடை !

இணைப் பனை கால்கள் !

நாணம் வரையும் கால் பெரு விரல் !

சற்றே நீளமாய் அடுத்த விரல் !

தனி அறை............................

இத்தனை அழகுடன் கூட்டமாய் நீ !

போர் வீரனாய் தனியே நான் !

மெதுவாய் என் அருகில் வந்தாய்.........................

பிடறி மயிர் பற்றி..........................

ஆவேசமாய் எனை அணைத்த.................. அன்றாவது..................

என் ஆழ்ந்த கனவை கலைக்காமல் இருந்திருக்கலாம் , என் தாத்தாவின் 

இருமல் !