Thursday 15 December 2011

எ.கொ.சா.இ

சின்ன வயசுல , பிறந்தநாள் பரிசா அப்பா வாங்கிக் கொடுத்த வீடியோ கேம் ரொம்பப் பிடிச்சுப் போயி ,
ஆறு நாள் தொடர்ந்து விளையாடிட்டு அதுக்கப்புறம் அத தொடவே இல்ல !

கொஞ்சம் பெரியவனா ஆனதுமே............. ,
எல்லாருந்தான் சைக்கிள் ஓட்டுராய்ங்கன்னு ,
ஆசையா சைக்கிள் பழகி ஆறு மாசம் சைக்கிளே கதின்னு கெடந்ததுல, சைக்கிள் டயர் போலயே என் சைக்கிள் ஆசையும் தேய்ஞ்சு போச்சு!

படிக்கிற வயசுல, சரியாப் படிப்பு வரலைனாலும், ஒரே வகுப்புல , ஒரு வருஷம் முழுசா படிக்க முடியாம, டீச்சர் சரியா சொல்லித்தரலைன்னு அப்பாட்டச் சொல்லி வகுப்பு பிரிவையும் அடிக்கடி மாத்தீருவேன் !

பத்தாவது வரைக்கும் படிச்சதுக்கே பள்ளிக்கூடம் சலிச்சுப் போயி, கேட்டரிங் காலேஜ்ல போய் சேர்ந்துட்டேன் !
ரெண்டே செமஸ்டர்தான்.......  கேட்டரிங்குக்கு டாட்டா சொல்லீட்டேன் !

கம்ப்யூட்டர் , கர்னாடக சங்கீதம், ஸ்போக்கன் இங்கிலீஸ்னு  எல்லா கிளாஸுக்கும் போனேன்........................ ,
பாதியிலேயே போர் அடிச்சு விட்டுட்டேன் !

நிறையா பொண்ணுங்கள சைட் அடிச்சு..................,
ஒவ்வொரு பொண்ணா, நாலு பொண்ணுங்கள லவ்வும் பண்ணிப் பாத்தேன்..................,
ம்ம்ம்ஹூம் சரியா செட் ஆகல !

சரி வேலைக்குப் போலாம்னு முடிவு பண்ணி  ................,
மெடிக்கல் ஷாப். சூப்பர் மார்க்கெட், பனியன் கம்பெனின்னு எல்லாத்துக்கும் போனேன் .......................  ,
எதுவுமே என் திறமைக்கு தகுந்ததா தெரியல !

இனி சொந்த வியாபாரம்தான் சரின்னு முடிவு பண்ணி..................,
அப்பாகிட்ட ஒரு லட்சம ரூபாய  அடம் பிடிச்சு வாங்கீட்டுப் போயி ஒரு பேன்ஸி ஸ்டோர் ஆரம்பிச்சேன்............,
வருமானம் திருப்தியா இல்ல !

இப்ப வேற ஏதாவது பெரிய பிஸினஸ் ஆரம்பிச்சுப் பாக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போது............




எனக்கு கல்யாண வயச்சாச்சுன்னு அம்மா சொல்ராங்க ........!


- ஜீவன் -

Wednesday 7 December 2011

அன்றாவது..........



பனி இரவு.........

முன் நெற்றியில் சரியும் கற்றை முடி !

பிறை நெற்றியில்,  முழு நிலாப் பொட்டு !

தேனில் விழுந்த திராட்சை போல, பாதி மூழ்கிய காமக் கண்கள் !

பக்கம் வந்தால் குத்திக் கீறிடும், கத்தியாய் நாசி !

கன்னத்தில் காலூன்றி, காது மடல் கவ்வி, ரகசியம் பேசும் காதணி !

சிலம்பாய் இதழ்கள்  !

பரல்களாய் பற்கள்!
உன் கழுத்து உரசியே தங்கமாய் மாறிக்கிடக்கும் சங்கிலி !

முழு முதுகு மறைத்து, பிட்டம் தாண்டிக் குதிக்கும் கருப்பு அருவியாய் கூந்தல் !

சேலையில் அடங்கா அழகு ................. !

வெள்ளைக் கரும்பு கைகள் !

கருப்புச் சேலையின் முந்தானை செருகியே, சிவந்து கிடக்கும் மஞ்சள் இடை !

இணைப் பனை கால்கள் !

நாணம் வரையும் கால் பெரு விரல் !

சற்றே நீளமாய் அடுத்த விரல் !

தனி அறை............................

இத்தனை அழகுடன் கூட்டமாய் நீ !

போர் வீரனாய் தனியே நான் !

மெதுவாய் என் அருகில் வந்தாய்.........................

பிடறி மயிர் பற்றி..........................

ஆவேசமாய் எனை அணைத்த.................. அன்றாவது..................

என் ஆழ்ந்த கனவை கலைக்காமல் இருந்திருக்கலாம் , என் தாத்தாவின் 

இருமல் !

Monday 5 December 2011

வாடிய பயிர்

காரு, வண்டி போற பெரிய ரோட்டுலருந்து மூணுகல்லுத் தூரந்தேன்னாலும், நடந்தே போறதுக்கு அரைமணியாது ஆகிப்போகும் !
தார் ரோடு போட்டிருக்கு........................
எப்பவாது வர்ற பஸ்ஸுக்குன்னு போட்ட ரோடுன்னாலும், சோளமும்,கம்புந்தேன் எப்பவுமே காஞ்சுகிட்டு கெடக்கும் !

வழி நெடுக்க புளியமரம் பகல்லயே பயமுறுத்தும்!

ஓடைப்பாலம் தாண்டிப்போனா ஆடுகல்லாம் மேஞ்சுட்டுருக்கும் !

ஊரு நொழஞ்சதுமே, பிரசிடெண்ட் அய்யா தொறந்துவச்ச எம்.ஜி.ஆர். செல வரவேக்கும் !

ஊர் பொது களத்துக்கு எதுத்தா போல டீக்கடை ஒன்னு இருக்கும் !

யாரு வூட்டுக்கு விருந்தாளா போனாலும் டீக்கடை அக்காதேன், மொதல்ல செளக்கியத்த கேட்டுப்புட்டு டீத்தண்ணியும் போட்டுத்தரும் !

வாத்தியாரு வூட்டுக்கு பின்னாலயே அஞ்சாப்பு வரையுமுள்ள பள்ளிக்கோடம் ஒன்னுருக்கும். கடைசி பெல்லு அடிக்கிற வரைக்கும் பயபுள்ளைக "குய்யோ மொறையோன்னு" கத்திகிட்டு கெடக்கும் !

தெருவுக்குள்ள நொழையும் போது, வெத்தலைய இடிச்சுக்கிட்டெ கெழவி ரெண்டு , நெத்திமேல கைய வச்சு அடையாளம்தேன் பாக்கும். அடையாளந் தெரியலேன்னா ஆரு சாமி நிய்யின்னு கேட்டு தெரிஞ்சுட்டுத்தேன் தெருவுக்கு உள்ளயே வுடும்!

தெருவுக்கு ஏழெட்டு வூடுகதானிருக்கும், வூட்ட வுட வாசல்ல கோலந்தேன் பெருசாருக்கும் !ஓட்டு வூட்டுக்குள்ள சூரியென் வெளிச்சம் பட்டா, பொக போல தூசி பறக்கும் !

அடுப்பு மேட்டு மேல சாணி போட்டு மொழுகீருக்கும், பாத்திரங்க அத்தனையும் அது இஷ்டத்துக்கு நெளிஞ்சிருக்கும், பழைய சோத்துச் சட்டி மேல உறிச்ச வெங்காயம் நாலு கெடக்கும் !

ஒழுகுற மூக்கத் தொடைக்க புள்ளைக கைய எடுத்தா, அது வரைக்கும் பிடிச்சுருந்த டவுசரு கழண்டு விழும் !

திருவிழா, திருவிழாவுக்குத்தேன் பூசை நடக்கும், ஊருக்கு மத்திலருக்கும் காளியாத்தா கோயிலுக்கும் !

சாவடி திண்ணையில ஆடுபுலியாட்டம் நடக்கும், வீண் சண்ட போடுறதுக்கும், வேடிக்க பாக்குரதுக்கும் பெரிய கூட்டமே அங்க நிக்கும் !

சக்களத்திச் சண்ட போல சாதிச் சண்டயும் நெறயா நடக்கும் !

ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசயா, நல்லாத்தேன் போயிகிட்டுருந்துச்சு..............

கெணத்துல தண்ணி வத்தி, வெவசாயம் நின்னு போயி , ஊரக் காலி பண்ணி சனமெல்லாம் மில்லு வேலைக்குன்னு வெளியூரு போற வரைக்கும் !

இன்னைக்கு சாவடித்திண்ணையும், வாசல்ல கோலமும், மூக்கொழுகுற புள்ளைகளும் இல்லாம........................

காஞ்ச பயிரா என் ஊரும் வாடிக்கெடக்குது !

-ஜீவன்-